தென் பகுதியின் சில பிரதேசங்களில் நேற்றுக்காலை சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக பூகற்பவியல் அகல்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்தது. இந்த நில அதிர்வு திஸ்ஸ மகாராம, லுணுகம் வெஹர, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பலந்தொட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக திணைக்கள பணிப்பாளர் டொக்டர் ஒ. கே. திசாநாயக்க கூறினார்.
இந்த நில அதிர்வினால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், நில அதிர்வு தொடர்பாக பல்லேகலேயில் உள்ள பூமியதிர்வு உபகரணங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 ரிச்டர் அளவை விட குறைந்தளவு நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நில அதிர்வு குறித்து திணைக்களம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
பல்லேகலே சுனாமி நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. கண்ணாடிகள், ஜன்னல்கள் என்பன ஒரு சில செக்கன்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.