அநுராதபுர இப்பலோகமவில் அரசாங்கத்தால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ‘ரணஜயபுர’ வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து படையினர்களிடம் கையளித்தார். 180 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணியில் சகல வசதிகளையும் கொண்ட 1509 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
புதிய வீடுகளுடன் மருத்துவ நிலையம், சிறுவர் பாடசாலை, வங்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அழகிய அமைதி சூழ்ந்த பிரதேசத்தில் இவ்வீடுகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று முற்பகல் மேற்படி ‘ரண ஜயபுர’ வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை வீரர்களின் பிள்ளைகளால் வரவேற்கப்பட்டார். முப்படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிகளுடன் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.