ஜீ. எஸ். பி. சலுகையைப் பெறுவதற்காக நாம் எதையும் செய்யத் தயாராகக் கூடாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இது விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்களுக்கான சலுகை என்பதால் ஓரளவு வளைந்து கொடுக்க முடியுமே தவிர முழுமையாக சர்வதேசத்திடம் மண்டியிட முடியாது. அரசாங்கம் சட்டங்களையும் பொது விதிமுறைகளையும் மதிக்கிறது. உதாரணமாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வீதித் தடைகளை நீக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்வொன்றை வழங்கியிருந்தது.
எனினும் அது தவறான முடிவென்பதை அரசாங்கம் உணர்ந்தது. அமைச்சரவை கூடி இது விடயத்தில் கலந்துரையாடியும் காலத்துக்குப் பொருந்தாத தீர்ப்பு எனினும் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து அதனை செயற்படுத்தியது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.