வவுனியா நீதிமன்ற வளாகத்துடன் இணைந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை பிரதி நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணி செவ்வாய்க்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைத்தார். வவுனியாவில் ஏற்கனவே அமைந்திருந்த விளக்கமறியல் சிறை அமைந்திருந்த இடத்தில் 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாடிக்கட்டிடச் சிறையில் 300 பேரை தடுத்து வைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனுராதபுரம் மற்றும் தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களது உறவினர்கள் அங்கு சென்று அவர்களைப் பார்ப்பதில் அனுபவித்து வந்த பல சிரமங்கள் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டதன் மூலம் நீக்கப்படுவதாக இங்கு உரையாற்றிய பலரும் தெரிவித்தனர்.
சுமார் 50 பெண் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வசதியும் இந்த சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.