தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் – அரசாங்கம் தீர்மானம்

091009puttirasigamani.jpgதடுத்து வைக்கப்படடுள்ள தமிழ்க் கைதிகளை விசாரிக்க விசேட நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ்க் கைதிகளுக்கு இதன் மூலம் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்;.

கைதிகளின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு விரைவில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இந்த நீதிமன்றம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்ப 10 சட்டத்தரணிகளை நியமித்து கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட இருப்பதாகவும் இதன் மூலம் சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *