தென் மாகாண புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு. முன்னணி கூடி இது குறித்து முடிவு செய்யும் எனவும் ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்தார்.
அடுத்த முதலமைச்சராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்பது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தலில் வெற்றிபெற்றோரின் விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் உத்தியோகபூர்வமாக அந்த விபரங்கள் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் அடுத்த முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம.சு. முன்னணி அமோக வெற்றியீட்டியது. ஐ. ம. சு முன்னணி சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா 90, 294 வாக்குகளையும் மாத்தறை மாவட்ட முதன்மை வேட்பாளரான முன்னாள் மாகாண அமைச்சர் ஹேமால் குணசேகர 63, 323 வாக்குகளையும் அம்பாந்தோட்டை மாவட்ட முதன்மை வேட்பாளரான முன்னாள் மாகாண அமைச்சர் வி. கே. இந்திக 56, 855 வாக்கு களையும் பெற்று முதலிடங்களை பெற்றனர். இவர்களுள் ஒருவர் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன