தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதோரில் 90 வீதமானோருக்கு அடையாள அட்டைகளை அனுப்பி வைத்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பணிப்பின்பேரில் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள பத்துவீதமானோருக்கும் அடுத்த வார இறுதிக்குள் அடையாள அட்டைகள் பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
தென் மாகாணத்திலுள்ள காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள 47 பிரதேச செயலாளர்கள் பிரிவிலிருந்து 18,464 விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளதுடன் இவற்றில் 90 வீதமானவர்க ளுக்கு தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் பிரிவுகளுக் கூடாகவே விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அடையாள அட்டைகள் அனைத்தும் உரிய பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து பகுதி கிராம சேவகர்களுக்கூடாக இவை உரியோருக்கு விநியோகிக்கப்படுமென தெரிவித்த அவர், விண்ணப்பதாரிகள் விரும்பினால் தமது அடையாள அட்டைகளை பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.