இலங்கை இராணுவத்தின் 60 வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளன.
1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக மாபெரும் இராணுவக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின்போது இராணுவத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய தகவல்கள், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறிவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும்.
ஒக்டோபர் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சமயக் கிரியைகளையடுத்து ஆரம்பமாகவுள்ளன.
பௌத்த சமயக் கிரியைகள் ஒக்டோபர் 02ஆம் திகதி அநுராதபுரம், ஜய ஸ்ரீ மகா போதி விகாரையிலும், இஸ்லாமிய சமயக் கிரியைகள் ஒக்டோபர் 05ஆம் திகதி கொழும்பு, தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளியிலும், இந்துசமயக் கிரியைகள் ஒக்டோபர் 06ஆம் திகதி மருதானை, ஸ்ரீ பாலா செல்வநாயகம் மூர்த்தி கோயிலிலும், கிறிஸ்தவ சமயக் கிரியைகள் ஒக்டோபர் 07ஆம் திகதி கொழும்பு, கத்தோலிக்க தேவாலயத்திலும் நடைபெறவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.