தென் ஆபிரிக்காவில் நடைபெறும் சம்பியன்ஸ் கோப்பையை வென்று மறைந்த பயிற்சியாளர் வூல்மருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பொப் வூல்மர் கடந்த 2007ஆம் ஆண்டு மே. தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது (50 ஓவர்) மர்மமான முறையில் இறந்தார். பிறகு அவரது மரணம் இயற்கையானது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மண்ணில் நடக்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வாகை சூடி கோப்பையை அவருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கப்டன் யூனுஸ்கான் சூளுரைத்து இருக்கிறார்.
8 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வருகிற 22ம் திகதி தென் ஆபிரிக்காவில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் 23ம் திகதி மே. தீவை எதிர்கொள்கிறது.
தென்ஆபிரிக்கா புறப்படுவதற்கு முன்பாக யூனுஸ்கான் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் வூல்மரின் சொந்த ஊருக்கு (தென் ஆபிரிக்கா) போகிறோம். சம்பியன்ஸ் கோப்பையை வென்று அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்.
கடந்த 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்த போது வூல்மர் எங்களுடன் இருந்தார். அந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் விளையாட முடியாமல் போனதால் வூல்மர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அந்த தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டோம். இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.
வூல்மர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய இழப்பு, இதனால் நாங்கள் இன்னும் வருத்தப்படுகிறோம். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகன்களுடன் நான் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வருகிறேன். கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அக் கோப்பையை வூல்மருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தோம். இந்த முறையும் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிப்போம். ஏனெனில் இது அவர் வாழ்ந்த நாடு என்றார்.