அண்மையில் (29.08.09) வல்லினம்இதழ் ஏற்பாட்டில் ‘கலை இலக்கிய விழா’ சிறப்பாக நடைப்பெற்றது. தான் சிரி சோமாஅரங்கிலும் மண்டபத்திலும் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்த இந்த விழாவின் முதல் அங்கமாக ஓவியர் சந்துருவின் ஓவிய கண்காட்சியும் ஸ்டார் கணேசனின் நிழல்பட கண்காட்சியும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. ஓவியர் சந்துரு இந்நிகழ்வுக்கென பிரத்தியேகமாய் வரைந்த தோட்டப்புற வாழ்வு சார்ந்த காட்சிகள் பலரையும் நமது சுவடுகளை மீட்டுணர உதவியது. ஸ்டார் கணேசனின் அற்புதமான புகைப்படங்கள் அவரின் பத்திரிகைத் துறையைத் தவிர்த்து அவர் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான கலையுணர்வை வெளிபடுத்தியது.
நிகழ்விற்குத் தலைமையேற்ற தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தலைவர் டத்தோ.சகாதேவன் மற்றும் சிறப்பு வருகை புரிந்த கொடை நெஞ்சர் ரத்னவள்ளி அம்மையார் முறையே ஓவியர் சந்துருவின் ஓவியத்தையும் ‘ஸ்டார்’கணேசனின் நிழல்படத்தையும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் இவ்விரு கலைஞர்களும் தங்கள் கலைப் பயணத்தைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டாவது அங்கம் தான்சிரி சோமா அரங்கில் நடைப்பெற்றது. நிகழ்வின் ஏற்பாட்டாளரான ம.நவீன் தமது வரவேற்புரையில் சமரசங்கள் இன்றி வல்லினம் தனது பாதையில் செல்வதையும் அதன் பயணம் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். நிகழ்வின் முக்கியப் புரவலரான திரு.ராமகிருஷ்ணன் வல்லினம் தொடர்ந்து சிறப்பாக பயணிக்க வேண்டும் என வாழ்த்தி அமர்ந்தார். வல்லினம் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய டாக்டர்.சண்முகசிவா சிற்றிதழ்களின் தோல்விதான் அதன் வெற்றி என்றார். ஒரு சிற்றிதழ் உருவாகும்போதே அதுதன் மரணத்தைத் தீர்மாணித்தப் படிதான் உருவாகிறது என்றார்.
‘கவிதை திறனாய்வு’ கட்டுரையை வாசிக்க வேண்டியிருந்த ஜாசின் ஏ.தேவராஜன் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போகவே அவரது கட்டுரை மட்டும் கவிஞர்.பச்சைபாலனால் வாசிக்கப்பட்டது. எழுதியவர் இல்லாததால் விவாதங்களும் நடைப்பெறவில்லை.
தொடர்ந்து வல்லினத்தில் இடம்பெற்ற சிறுகதைகளை ஒட்டி யுவராஜன் விமர்சனம் செய்தார். சுருக்கமான தீவிரமான அவர் விமர்சனம் பலரிடமிருந்து அதிருப்தி அலையை ஏற்படுத்தியது. பலருக்கு விமர்சனம் புரியவில்லை என்பதும் உண்மை. மரபான விமர்சனத்தில் இருந்து விலகி யுவராஜன் தன்னைக் கவர்ந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதின் மையத்தை பற்றி உருவிபேசியது மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குப் புதுமை.
ஒரு மணிநேர உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அங்கம் தொடங்கியது.
எழுத்தாளர் கோ.முனியான்டி அவர்களால் அமரர்.எம்.ஏ.இளஞ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.29.09.09 எம்.ஏ.இளஞ்செல்வனின் நினைவுநாள் என்பது அப்போதுதான் பலருக்கும் தெரிந்ததும் மலேசியாவில் புத்திலக்கியம் வளர வேண்டும் என ஆவல் கொண்டு செயல்பட்ட அவரின் நினைவு நாளில் ‘கலை இலக்கிய விழா’ நடைப்பெற்றது தற்செயலான இன்பம்.
ம.நவீனின்கவிதை தொகுதியான ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ புத்தகத்தை ஆதி.இராஜகுமாரன் அவர்கள் வெளியிட ம.நவீன் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். இபா.அ.சிவத்தின் மொழிப்பெயர்ப்புக் கவிதையான ‘பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது’ நூலை எழுத்தாளர் கோ.முனியான்டிவெளியிட வழக்கறிஞர் மதியழகன் பெற்றுக்கொண்டார். இமஹாத்மனின் சிறுகதையான ‘மஹாத்மன் சிறுகதைகள்’ நூலினை எழுத்தாளர் சீ.முத்துசாமி வெளியிட மஹாத்மனின் தாயார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூல் திறனாய்வு நடைப்பெற்றது. ம.நவீனின் நூலை பா.அ.சிவமும் மாஹாத்மனின் நூலை சிவா பெரியண்ணனும் சிவத்தின் நூலை சீ.அருணும் முறையே ஆய்வு செய்தனர். அவ்வமர்வில் சிங்கை இளங்கோவனின் உரையும் இடம்பெற்றது. அதிகாரத்துக்கு முன் இலக்கியவாதி அடிமையாகக் கூடாது என்பதிலிருந்து அவருக்கே உரிய தீவிரத்துடன் உரையை கூர்மைப்படுத்துனார்.
நிகழ்வின் இடைவெளியாக மீண்டும் அரை மணிநேரம் தேநீருக்காக ஒதுக்கப்பட்டு நான்காம் அங்கம் தயாரானது.
அடுத்த அமர்வில் ‘வல்லினம்’காலாண்டிதழ் மாத இதழாக அகப்பக்கமாக வெளியீடு கண்டது. வழக்கறிஞரும் சமூக அக்கறை மிகுந்தவருமான பசுபதி அவர்கள் சமூக விழிப்புணர்வு மிக்கத் தமது உரைக்குப்பின் அகப்பக்கத்தை வெளியீடு செய்தார். http://vallinam.com.my/ எனும் முகவரியில் இயங்கும் வல்லினம் இணைய இதழ் இனி மாதம் தோறும் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பது.
இறுதி அங்கமாக சிங்கை இளங்கோவனின் ‘மிருகம்’ நாடகம் ஒளித்திரைவழியாக அரங்கேற்றம் கண்டது.சிங்கப்பூருக்கு வந்து சேரும் தமிழகத் தொழிலாளிகளால் சிங்கைவாசிகள் குறிப்பாகத் தமிழர்கள் அடையும் பாதிப்புகளை அது எடுத்து இயம்பியது. காத்திரமான அந்நாடகத்தால் பலர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் நாடகத்தை நிறுத்தும்படியும் கூச்சலிட்டனர். ஒன்றரை மணி நேர நாடகமான ‘மிருகம்’ நிறைவு கண்டதோடு நிகழ்வும் முடிவுற்றது சில பதற்றங்களோடும்… சில அதிர்ச்சிகளோடும்… புத்துணர்வோடும்.