திரு கோணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் ‘ரை ஸ்டார்’ நிறுவனத்தின் 34ஆவது ஆடைத் தொழிற்சாலையைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம ஆகியோர் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். இத்தொழிற்சாலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா மத்திய அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே எஸ்.எம். சந்திரசேன, முதலீட்டு ஊக்குவிப்பு சபைத் தலைவர் தம்மிக்க பெரேரா, பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டறவு அபிவிருத்தி உதவி அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வரும் ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இத்தொழிற்சாலையில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கப்படும்; முதலாவது கேள்வி ஒப்பந்தம் பிரித்தானியாவிலிருந்து கிடைத்துள்ளதாக ரை ஸ்டார்’ நிறுவனத்தின் தலைவரான குமார் தேவபுர தெரிவித்துள்ளார்.