இலங்கை யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலியாகத் தயாரித்து பிரித்தானியாவின் செனல்-4 தொலைக்காட்சி சேவை ஊடாக ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம்கொடுக்க அரசு தயார் என்றும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முதல்கட்ட நடவடிக்கையாக இந்த வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.
இதேவேளை, குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என வெளிநாட்டுச் சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக எமது உள்நாட்டுப் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.