வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை செய்தி ஏஜென்ஸிகளுக்கு வழங்கிக் குற்றமிழைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் டாக்டரும் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் எஸ்.சிவபாலன் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்தஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து இரண்டு லட்சம் ரூபா உறுதிப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு டாக்டர்களையும் கடந்த 24ஆம் திகதி நிபந்தனைப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவானால் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.