இந்தியா வின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திராயன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திராயனுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திராயன். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திராயன். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும் இது என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் சந்திராயனின் பயணத்தால் பெருமிதம் கொண்டிருந்தனர். நிலவை வலம் வந்து கொண்டிருந்த சந்திராயன் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. சந்திராயன் விண்கலம் என்ன ஆனது என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் சந்திராயன் ஏற்கனவே தனது பணிகளை நிறைவேற்றி விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவை அடைவது மற்றும் நிலவு குறித்த புகைப்படங்களை அனுப்புவது ஆகிய முக்கியப் பணிகளை சந்திராயன் ஏற்கனவே முடித்து விட்டதாக இஸ்ரோ கூறுகிறது.
நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வையும் சந்திராயன் மேற்கொண்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சந்திராயன் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சூடு ஆகிய பிரச்சினைகளைச் சந்தித்தது. இந் நிலையில் தற்போது சந்திராயனுக்கும், இந்தியாவுக்குமான ததகவல் நின்று போய் விட்டது. விண்வெளியில் 312 நாட்களை முடித்துள்ளது சந்திராயன். நிலவைச் சுற்றிலும் மொத்தம் 3,400 முறை வலம் வந்துள்ளது.