அரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருடத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாதென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
யுத்தம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2009ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் காரணமாக இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள நேரிட்டதாகவும் இதனால் சம்பள உயர்வுகளை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது பற்றுடையோர் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மின்சாரசபை ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும், உரிய பதில் கிடைக்காதவிடத்து பணிப் பகிஷ்கரிப்பு காலம் நீடிக்கப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கிரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.