மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் கூறினார். புனித ரமழானை முன்னிட்டு காத்தான்குடி அங்காடி வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்த வரை தற்போது தமிழர்களும் முஸ்லிம்களும் விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாக சென்றுவரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சகலரும் மகிழ்ச்சியடைய வேண்டும். இப்படியான சூழ்நிலை காரணமாக எமது மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைவதோடு இனங்களிடையே உறவும் வலுப்பெற்று வருகின்றது.
அங்காடி வியாபாரிகைளப் பொறுத்த வரை எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தற்போது தமிழ்க் கிராமங்களில் எல்லாம் சென்று வியாபாரம் செய்யும் போது அவர்களுக்கிடையிலான உறவையும் பேணி வருகின்றார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். சங்கத்தின் ஆலோசகர் ஏ.எல்.எம். பலுலுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்களான சுமார் 500 பேருக்கு பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.