யாழ்ப்பாணத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்த ரூ. 1035 மில். ஒதுக்கீடு -கல்வி அமைச்சர்

26parliament.jpgயாழ் குடாவில் உள்ள 31 பாடசாலைகளை இசுரு பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 32.5 மில்லியன் ரூபா வீதம் வழங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

இது தவிர வடக்கிலுள்ள 75 பாடசாலைகளுக்கு கணனிப் பிரிவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வடக்கிலுள்ள 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் தொடர் பாக ஐ.தே.க. முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, வடபகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை கிடையாது. அண்மையில் 400 ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட னர். கிழக்கில் 3500 ஆசிரியர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டனர்.

தவணைப் பரீட்சைகளில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை நடத்தியது. இந்தத் தவறுகளுக்கு 12 அதிகாரிகள் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். அதிகாரிகளின் கவனயீனம் மற்றும் தவறினாலேயே இந்தப் பிழைகள் நடந்தன. 9 மாகாணங்களிலும் தவணைப் பரீட்சை நடத்த 90 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடத் தேவையான பணத்தை கல்வி அமைச்சு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் முதல் நிதி ஆணைக் குழுவினூடாக தேவையான பணம் வழங்கப்படும். வினாத்தாள்கள் தயாரிப்பது தொடர்பாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவூட்ட உள்ளோம்.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பேராசிரியர்கள் தலைமையிலான குழுக்களே வினாத்தாள்களை தயாரித்தன.

இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக பொறுப்பேற்கப்பட்ட 17 பாடசாலைகளிலும் அடுத்த தவணையின் போது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரம் முதல் முகாம்களில் உள்ள சாதாரண தர மாண வர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *