சகல முஸ்லிம் அமைப்புகளையும் உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பு – உலமா சபை தலைமையக மாநாட்டில் இணக்கப்பாடு

muslim-prayer.jpgஇந்நாட்டில் தஃவா பணியில் ஈடுபட்டுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படவென பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இணக்கப்பாடு தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலர் அஷ் ஷெய்க் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

அண்மையில் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் தலைமையகத் தில் 2009.08.18 அன்று ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன், தரீக்காக்கள், தஃவா அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தரீக்காக்கள், தஃவா அமைப்புகளுக்கு இந் நாட்டில் பல ஆண்டு கால வரலாறு உண்டு. இவைகளின் பணிகள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பயன்களை அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள், சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் அவற்றின் நன்மைகள் அதிகம் என்பதே எல்லோரினதும் கருத்தாகும்.

இந்நிலையில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சுமுகமான ஒரு நிலையில் தத்தமது செயற்பாடுகளையும் பணிகளையும் மேற்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தரீக்காக்களினதும் தஃவா அமைப்புகளினதும் மற்றும் சில உலமாக்கள் எதிர்கால அமர்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் மேற்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அன்புப் பிணைப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியில் ஈடுபடுவதன் அவசியம் பற்றி எல்லோரும் வலியுறுத்திப் பேசியதுடன், எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையுடனும் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்ளுமாறும் அங்கு வருகை தந்த அனைவரும் வேண்டிக்கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நன் முயற்சி தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *