வடக்கின் 3 மாவட்டங்களில் 280 மீன் விற்பனை நிலையம் – திட்டத்தை செயல்படுத்த ரூ. 30 மில். ஒதுக்கீடு

fisherman.jpgவடக்கின் மூன்று மாவட்டங்களில் புதிதாக 280 மீன் விற்பனை நிலையங்களை அமைக்க மீன்பிடித் துறை மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தை செயல்முறைப்படுத்துவதற்காக அமைச்சு 30 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சின் செயலாளர் ஜி. பியசேன தெரிவித்தார்.

யாப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இம்மீன் விற்பனை நிலையங்களை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மீன்பிடி ‘சீசன்’ ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வட மாகாண மீனவர்களை ஊக்குவிக்கும் வகையில் இம் மீன் விற்பனை நிலையங்களை அமைக்குமாறு மீன்பிடித் துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா வழங்கிய பணிப்புரைக்கமையவே இச்செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் வட மாகாணத்தில் உள்ள மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்துக்கான மீன்பிடி உதவிப் பணிப்பாளர்களின் வழிகாட்டலுடன் இம்மீன் விற்பனை நிலையங்களை அமைத்து வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்களனைவரும் மீளக்கூடியமர்த்தப்பட்ட பின்னரும் இம்மீன் விற்பனை நிலையங்கள் நிரந்தரமாக செயற்படுமென தெரிவித்த அமைச்சின் செயலாளர், இவ்விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சு பின்னர் நடவடிக்கை எடுக்குமெனவும் கூறினார்.

இதேவேளை வடக்கில் பிடிக்கப்படும் மீன்களில் அம்மாகாணத்தின் நுகர்வுத் தேவை போக எஞ்சியவை கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படு மெனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *