![]()
விடுத லைப்புலிகளின் புதிய தலைவரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளை மீறிச் செயற்படவில்லை என உறுதிபடத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்ட விதத்திலேயே சகலதும் இடம்பெற்றிருப்பதாகவும் சில உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைந்துள்ள ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கே.பி.கைது தொடர்பாக சர்வதேச நெருக்கடிக்குழு தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் அவதானமாக நோக்கப்பட வேண்டியதாகவே காணப்படுகிறது. புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்டபோதிலும் சர்வதேச மட்டத்தில் நிதி திரட்டுதல், சர்வதேச ஒத்துழைப்பை தம்பக்கம் ஈர்த்தெடுத்தல் போன்ற விடயத்தில் கே.பி. இயங்கும் வரை அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற முடியாது போகும் என அது குறிப்பிட்டிருந்தது.
ஆனால், அரசாங்கம் இன்று அதில் வெற்றிகண்டுவிட்டது. இனி மேல் புலிகளின் பெயரால் எதனையும் செய்யக்கூடிய சிறிய முயற்சிக்குக் கூட இடம் கிடையாது. கே.பி.யை கைதுசெய்ய எடுக்கப்பட்ட மூன்றாவது முயற்சியிலேயே அது கைகூடியுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி பிரேமதாஸ எடுத்த முயற்சி ஆரம்பத்திலேயே கைநழுவிப்போனது. அடுத்த கட்டமாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் முயற்சிக்கப்பட்டது. அதுவும் இடைநடுவில் செயலிழந்து போனது. எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சரியான வியூகம் அமைத்துச் செயற்பட்டதன் மூலம் காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.
பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிப்பதில் படைத்தரப்பு தான் வெற்றி கண்டபோதிலும் அதற்குப் பின்புலமாக இருந்தது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தான். யுத்தத்தை வழிநடத்தியது அரசாங்கம் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கே.பி. கைது விவகாரத்தில் சர்வதேச சட்டம் மீறப்பட்டதாக சில சக்திகள் தெரிவிக்கின்றன. இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். சர்வதேச சட்டவிதிகளில் ஒரு துளியளவும் மீறப்படவில்லை. அவசியப்படும் போது அது குறித்து பாதுகாப்பு விளக்கமளிக்கும். பாதுகாப்புத்தரப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டால் இது குறித்து போதிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விடயத்தில் இதற்கு மேலாக தம்மால் எதனையும் கூறமுடியாது என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.