கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை நாடு கடத்துமாறு உத்தியோகபூர்வமாக இலங்கையைக் கோருவதற்கு காலம் எடுக்கக்கூடும் என்பதால் அவர் மீதான விசாரணை தொடர்பான விபரங்களைக் கடிதம் மூலம் கொழும்பிடம் இந்தியா விரைவில் கோரக்கூடும் என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கே.பி.யின் கைது தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக பதிலளித்துள்ள வட்டாரங்களே இதனைக் கூறியுள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தருணத்தில் நாடு கடத்தும் கோரிக்கை உடனடியாக விடுக்கப்படுமெனத் தோன்றவில்லை. முதலாவதாக கே.பி. விவகாரத்தை இலங்கை கையாள்வதற்கே சர்வதேச சாசனங்கள் இடமளிக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு கே.பி.யை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்தியா உடனடியாக விடுக்காது. சென்னையில் கே.பி.யை கைது செய்வதற்கான ஆணையை இந்தியா விடுத்திருந்தது. ராஜீவ்காந்தி படுகொலை சதியின் பின்னணி தொடர்பாக அதிகளவு விபரங்களைப் பெற்றுக்கொள்ள கடிதம் மூலம் விபரங்களை இந்தியா பெற்றுக்கொள்ளும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடிதத்தில் கேட்டல் (Letter Rogatory) என்பது உள்ளூர் நீதிமன்றத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும் விடயமாகும். இது சட்ட ரீதியான வழிமுறையாகும். வெளிநாட்டில் சில தொடர்புகள் இருந்தால் வழக்கு விசாரணைக்கு உதவியாக ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து உதவி பெறுவதற்கு இது இடமளிக்கிறது.
கே.பி.யை நாடு கடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு முன்பாக பூர்வாங்க விசாரணைகளை நடத்த வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை தெரிவித்திருந்தது. இந்தியா கே.பி.யை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தால் இலங்கை தனது விசாரணைகளை நிறைவு செய்த பின் சர்வதேச விதிமுறைகளுக்கு அமையச் செயற்படும் என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார்.
இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவரமைப்புக்கு கே.பி. தேவைப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவரமைப்பே ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னாலுள்ள பாரிய சதியில் கே.பி.யின் பங்களிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி.க்கு தெரியுமென்ற சந்தேகம் விசாரணை முகவரமைப்புகளிடம் உள்ளன.