கொழும்பு மறை மாவட்டப் பேராயராகப் பதவி வகித்து அண்மையில் ஓய்வு பெற்ற அதி வணக்கத்துக்குரிய பேராயர் பேரருட்திரு ஒஸ்கோல்ட் கோமிஸ் ஆண்டகைக்கு அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கெளரவித்தது. அத்துடன் சமய அலுவல்கள் பண்பாட்டுத்துறை அமைச்சும், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களமும் சேவை பாராட்டு விருதுகளை வழங்கி கெளரவித்தன.
அத்துடன் தபால் தொலைத் தொடர்பு அமைச்சு விசேட தபால் முத்திரை யொன்றையும் வெளியிட்டு ஒஸ்வோல்ட் ஆண்டகையின் சேவையைக் கெளரவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற புதிய பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கெளரவிக்கும் நிகழ்வில் மேற்படி கெளரவமளிப்பும் இடம் பெற்றது.
புதிய மற்றும் முன்னாள் பேராயர்களுக்கு மத அலுவல்கள் அமைச்சும், கிறிஸ்தவ சமய விவகார திணைக்களமும் நினைவு விருதுகளை வழங்கி கெளரவித்தன. அமைச்சர்கள் பண்டு பண்டாரநாயக்க, ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் இவ்விருதுகளை வழங்கியதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்களுடன் பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி பேரருட்திரு ஜோசப் ஸ்டப்ஸனும் இந் நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.