பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் அமைப்பாளர் வா.மு.சேதுராமன் சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது, உலக தமிழுறவு மன்றத்தின் சார்பில் 6வது உலக தமிழர் மாநாட்டை உலக தமிழர் ஒற்றுமை மாநாடு என்ற பெயரில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஈழம் மற்றும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அண்ணா கவி அரங்கம், உலகளவில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
முன்னாள் மலேசிய மந்திரி டத்தோ சாமிவேலு மற்றும் மலேசிய மந்திரிகள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழக துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி, மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோருக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு வா.மு. சேதுராமன் கூறினார்.
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே. திருவள்ளுவர், காப்பாளர் மாம்பலம் சந்திரசேகர், வழிகாட்டும் குழுவினர் செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா. கணேசன் உட்பட மன்றத்தின் நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.