வவுனியா கொழும்பு ரயில் சேவைகள் நீண்ட காலத்தின் பின் இன்று சனிக்கிழமை முதல் வழமைபோல் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா, கொழும்பு இரவு தபால் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு இந்த ரயில் வவுனியா ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் தாண்டிக்குளம் வரையும் சென்றது.
வடக்கில் தற்போது அமைதியான சூழல் காணப்படுவதால் இந்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும வவுனியாவில் வியாழக்கிழமை கூறினார்.
பாதுகாப்புக் காரணங்களால் வவுனியா வரையுமான ரயில் சேவைகள் மதவாச்சி வரையும் மட்டுப்படுத்தப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தன. இன்று சனிக்கிழமை முதல் வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியாவுக்கும் வழமையான நேரப்படி ரயில் சேவைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து வவுனியா, மன்னார் பிரதேசங்களின் தபால் சேவைகளும் தாமதமின்றி நடைபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.