ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 115 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான வலையமைப்பு தெரிவித்துள்ளதுடன், இதில் தாக்குதல் சம்பவம் 9 எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது;
நேற்று வியாழக்கிழமை வரை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 115 முறைப்பாடுகளை நாம் பதிவு செய்துள்ளோம். இதில் அதிகளவாக சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பில் 42 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.
இதற்கு அடுத்ததாக 22 முறைப்பாடுகளில் அரச அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அரச சொத்து துஷ்பிரயோகம் குறித்து 16 சம்பவங்களை பதிவு செய்துள்ளோம்.
நாம் தாக்குதல் தொடர்பில் 9 சம்பவங்களும் சொத்துகள் மீதான தாக்குதல் குறித்து ஒரு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளோம். 14 சம்பவங்கள் தேர்தல் பிரசார காரியாலயங்கள் தாக்கப்பட்டமையாகவுள்ளது. அச்சுறுத்தல் குறித்து 5 முறைப்பாடுகளையும் தேர்தல் பிரசாரத்தை தடுக்கும் 6 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.