இலங்கை யுத்தம் முடிவிற்கு வந்து 2 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் யுத்த சம்பந்தமான செய்திகளை அதிகளவில் பிரசுரித்து வந்த இலங்கைப் பத்திரிகைகள் எதனைத் தற்போது செய்தியாக வெளியிடுவதென்ற புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளன.
யுத்தச் செய்திகள் மறைந்துள்ள நிலையில் வாசகர்களை எவ்வாறு கவர்வது என்பது தொடர்பாகவும் புதிய செய்திகளை எவ்வாறு பிரசுரிப்பது என்பது குறித்தும் பத்திரிகைகள் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றன. 25 வருடங்களாக மோதல் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வந்த இப்பத்திரிகைகள் இப்போது புதிய செய்திகளைக் கொடுப்பது தொடர்பாக திண்டாடுவதாக யூ.ஏ.ஈ.செய்திச்சேவையின் வெளிநாட்டு நிருபர் பைசல் சமத் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆங்கிலமொழி பத்திரிகைகளிலும் பார்க்க சிங்கள தமிழ் பத்திரிகைகளே இந்த விடயத்தில் அதிகளவிற்கு திண்டாடுகின்றன. பத்திரிகையாளர்கள் பாரிய சவாலை இது தொடர்பாக எதிர்நோக்குவதாக சிங்களப் பத்திரிகையான ராவயவின் ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்திருக்கிறார். விவாதம் மற்றும் கலந்துரையாடல் என்பன இப்போது யுத்தத்தில் இருந்து இதர விடயங்களுக்கு மாறியிருப்பதாகவும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு, கல்வி, அகதிகள், இன அரசியல், போக்குவரத்து, பாராளுமன்றம், தேர்தல் முறைமைகள், நீதித்துறை போன்ற விடயங்களுக்கு செய்திகள் இப்போது கவனம் செலுத்துவதில் மாற்றம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.