இந்திய உதவியுடன் கிழக்கு மாகாண சபைக்கு நேரடியாக கிடைத்த பஸ் வண்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது “ரயில்பஸ் “வண்டி இன்று மாலை உத்தியோக பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கும் வகையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 10 பஸ் வண்டிகள் மூலம் 5 ரயில்பஸ் வண்டிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ் வண்டிகளைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட முதலாவது ரயில்பஸ் இன்று மாலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ,மத்திய போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ,தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி ,மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கலந்துகொண்ட அரசாங்க அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள் ,மத பிரமுகர்கள் உட்பட சகலரும் தீவிர சோதனையின் பின்னரே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ரயில்பஸ் வண்டி இன்று மாலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து வாழைச்சேனை வரை வெள்ளோட்டம் விடப்பட்ட போது இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அதில் பயணம் செய்தனர்.
நாளை முதல் பயணிகள் சேவையில் ஈடுபடவிருக்கும் இவ் ரயில்பஸ் வண்டி தற்போதைக்கு மட்டக்களப்பிற்கும் – வெலிக்கநதைக்குமிடையிலேயே தினமும் ஒரு சேவையில் ஈடுபடும் என நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது