டெங்கு ஒழிப்பு: இலங்கையில் பக்டீரியா பயன்பாடு; 175 பேர் பலி; 6979 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டில் பயன்படுத்தப்படும் பக்டீரியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கு அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் இருவர் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு வருகை தருகின்றனர்.

இம்மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடியதும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய பக்டீரியா நுண்ணங்கியை இலங்கைக்குக் கொண்டு வருவதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகே நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டில் பி. ரி. ஐ. என்ற பக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலமான பயன்கள் தாக்கங்கள் குறித்து இலங்கை வரும் கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்படும். அக்கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு குறித்த பக்டீரியாவைத் துரிதமாக இலங்கைக்குக் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, சுகாதார பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால குறிப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் 14 ஆம் திகதி வரையும் டெங்கு காய்ச்சலுக்கு 17 ஆயிரத்து 860 பேர் உள்ளாகியுள்ளனர். இக்காய்ச்சல் காரணமாக இற்றைவரையும் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடத்தில் ஜூன் மாதத்தில் தான் இந்நாட்டில் அதிகளவானோர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளனவர்களாக இனம் காணப்பட்டனர் என்றாலும் இப்போது இக்காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. ஜூன் மாதத்தில் 6979 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்ட போதிலும், இம்மாதத்தின் முதல் 14 நாட்களிலும் 1904 பேரே இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

இக்காய்ச்சல் கொழும்பு, கண்டி, கம்பஹா, கேகாலை, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே தீவிர நிலையில் காணப்படுகின்றது. இக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சு விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *