புதிய இன்புளுவென்ஸா ஏ(ஏச் 1 என் 1) என்கிற பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இலங்கையில் 40 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் இனம் காணப்பட்டுள்ள சகலரும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருப்பவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, ஹொங்கொங், சவூதிஅரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் :-
இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த 28 பேரும், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த 5 பேரும், அமெரிக்காவிலிருந்து வந்த 4 பேரும், ஹொங்கொங்கிலிருந்து வந்த இருவரும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருத்துவ ஆராய்ச்சி நிலையம் இவர்கள் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருகை தரும் சகல பயணிகளும் தேர்மல் ஸ்கேனரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இப்பரிசோதனை மூலம் காய்ச்சலுக்கு உள்ளாகி இருப்பவர்கள் இனம்காணப்பட்டதும் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று நோய்கள் தவிர்ப்பு ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆறாயிரம் பயணிகள் வந்து செல்லுகின்றனர். இங்கு புதிய இன்புளுவென்ஸா பரிசோதனையில் டாக்டர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதற்குத் தேவையான மருந்துகள் எம்மிடம் கையிருப்பில் உள்ளன என்றார். இக்காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 708 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 546 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சல் 143 நாடுகளில் காணப்படுகின்றது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கூறினார்.