எகிப்தின் ஷார்ம் எல்சேக்கில் இன்றும் நாளையும் இடம்பெறும் அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் 118 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதுடன் இருதரப்பு சந்திப்புகளையும் அரசாங்கங்களின் தலைவர்கள் நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மன்மோகன் சிங் இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, நேபாளம், வியட்நாம் அரச தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்வாரென ஐ.எ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.
அணி சேராமை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாகும். ஜவஹர்லால் நேரு உத்தியோகபூர்வமாக அறிவித்த காலம் முதல் இது அடிப்படைக் கொள்கையாக இருந்து வருகிறது. நம்பிக்கைக்கான அணிகலனாக அது எம்மிடம் உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கெடுபிடி யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் இரு இராணுவ அணிகளாக உலகம் நீண்ட காலத்திற்கு பிளவுபட்டு இருக்கவில்லை. உலக ஒழுங்கில் பங்களிப்பினை வழங்கக் கூடிய விதத்தில் அணிசேரா அமையம் தோற்றம் பெற்றுவருகிறது.
அணிசேரா அமையத்தின் வேறுபட்ட தன்மையும் உலகளாவிய தன்மையும் இன்றைய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி இலக்கு, காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, சக்திப் பாதுகாப்பு, பயங்கரவாதம், சர்வதேச ஆட்சி முறைமை, வடிவமைப்பில் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பாக அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.