வட கொரியா நாடு கடந்த சில மாதங்களாக ஏவுகனைகளை விண்ணில ஏவி சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாடு சுமார் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. கடந்த மே மாதம் 25ம் திகதி வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதை கண்டு கொள்ளாத வட கொரியா அடுத்தடுத்து 4 தடவை அணு ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதித்துப் பார்த்தது. இதையடுத்து அணு ஏவுகணைகளை சோதித்துப் பார்க்க வடகொரியாவுக்கு தடை விதித்து ஐ. நா. சபை தீர்மானம் கொண்டு வந்தது.
இதையும் வடகொரியா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணை ஆய்வில் அந்த நாடு ஈடு பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென 4 குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணைகள் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் சக்தி கொண்டவை.
இந்த சோதனை அண்டை நாடான தென்கொரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அடுத்து நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்க்க தயாராகி வருவதாக ஜப்பான் உளவுத் துறை கூறி யுள்ளது. தற்போது வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் சுமார் 6,700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியவை. அடுத்த கட்டமாக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையை வட கொரியா தயாரித்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களை இந்த ஏவுகணைகளால் தகர்க்க முடியும்.