கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுதக் குழுக்களிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இரண்டு நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு வார கால அவகாசம் இன்றுடன் பூர்த்தி அடைகின்ற போதும்; மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை மூன்று மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் சுமுக நிலையை ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 18 ஆயுதக் குழுக்கள் உள்ளதாகவும் அக்குழுக்களிடம் 400 க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் உள்தாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளதென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆயுதங்களை ஒப்படைக்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் உத்தேசித்துள்ளனர். சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகின்றார். ஆயுதங்களைப் பொறுப்பேற்கவென பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.