வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள லயன் ஒன்றில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு லயன் அறைகள் எரிந்து சாம் பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார்.
இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும், இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.இத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனிலேயே இத் தீவிபத்து நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இத் தீவிபத்தினால் அங்கிருந்த நான்கு லயன் அறைகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கியிருந்து தீ பரவியதே காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமையல் பாத்தரங்களையும் உடுதுணிகளையும் வழங்க நுவரெலிய மாவட்ட செயலகமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. அத்தோடு செஞ்சிலுவைச் சங்கம் இவர்களுக்குப் பாய்களையும் உடுதுணிகளையும் மட்டுமல்லாமல் இவர்களது குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.