வடக்கில் புலிகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சேதமடைந்துள்ள ரயில் பாதைகளைப் புனரமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் 2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இந்த நிதியுதவி தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ரயில்வே ஆலோசனை சபையும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இவ்வொப்பந்தத்தின்படி பயங்கரவாத நடவடிக்கைகளால் சேதமுற்ற 250 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை மற்றும் 600 பயணிகள் பயணம் செய்யக்கூடிய ரயில் பெட்டிகள் ஆகியவற்றை மீளத்திருத்தியமைக்க பாகிஸ்தான் ரயில்வே ஆலோசனை சபை உதவும் என அதன் நிர்வாக இயக்குநர் மொஹமட் ரசீட் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களை ஏற்றும் 4 சில்லுகள் கொண்ட ரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்தும் பணிக்கும் உதவி வழங்கப்படவுள்ளதோடு, இலங்கை ரயில்வேயை நவீனமயப்படுத்தவும் அதன் ஊழியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கவும் இந்த ஒப்பந்தந்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.