குடா நாட்டின் முக்கியமான நீர் அணைக் கட்டுகளில் ஒன்றான தொண்டமனாறில் ஆரம்பமாகவுள்ள பாரிய புனர் நிர்மாண நடவடிக்கைகளை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.
குடாநாட்டின் பிரதேசங்களான வலிகாமத்தையும் வடமராட்சியையும் இணைக்கும் பகுதியான தொண்டமானாறு, உப்பாறு பிரதேசத்தில் உள்ள நீர்த் தடுப்பணைத் திட்டம் பாரியளவில் புனர் நிர்மாணத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டினூடாக கடல்நீர் உட்புகுவது தடுக்கப்படுவதுடன் அதன் தென்பகுதியில் மழை நீரைத் தேக்கி நிலத்தடி நீரை நன்னீராக்கும் பாரிய திட்டம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும், நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் காரணமாக இத்திட்டம் சீர்குலைந்ததுடன் முழுமையடையவில்லை.
எனினும், மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் செயற் திட்டத்திற்கமைய தொண்டமானாறு தடுப்பணைத் திட்டமானது பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் குடாநாட்டில் நிலத்தடி நன்னீரை பாதுகாக்கும் பாரிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி திட்டத்தையும், உயரதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபுகளையும் பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் தொடர்ச்சியாக பிரசித்திபெற்ற தொண்டமானாறு செல்வச் சந்நிதி தேவஸ்தான பகுதிக்கும் சென்ற பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கு திரண்டிருந்த மக்களையும் சந்தித்து கலந்துரையா டினார்கள்.