வட மாகாண மக்களுக்கு நாட்டுக்கே உரிய தனித்துவமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தனித்துவமான செயற் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றோம். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தி, தனித்துவமான ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.
அனுசரணை செயற் திட்டத்திற்கும் அப்பால், நாட்டுக்குப் பொருத்தமான செயற்திட்டத்தையே வடக்கில் நடைமுறைப்படுத்துகின்றோம்.
வீதி அபிவிருத்தி,மின்சாரம்,குடிநீர், விவசாயத்துறை மேம்பாடு ஆகிய பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள திட்டமிட்டு செயற்படுகிறோம். யாழ்ப் பாணத்திற்கான ஏ-9 பாதை, வவுனியா ஹொரவப் பொத்தானை வீதி உள்ளிட்ட வட பகுதியின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.