இலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது என பாதுகாப்புத்துறை பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய வானொலிச் சேவைக்கு நேற்று தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளின்போது இலங்கை மீது உலகின் பல நாடுகள் பெருமளவு வற்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தன. எனினும் எத்தகைய வற்புறுத்தல்களையும் சவால்களையும் இலங்கைக்கு எதிர்கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரூபித்துக் காட்டியுள்ளார். இதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.