இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை கையாள செயலணி

susil_prem_minister.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கவனிக்கவென கல்விச் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தனும் அங்கம் வகிக்கின்றார்.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வவுனியா தெற்கு கல்வி வலய அலுவலகத்திற்கு விஜயம் செய்தது. இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியா தெற்கு கல்வி வலயக் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் சச்சிதானந்தன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டிலேயே கல்விச் செயலணி அமைக்கப்பட்டது. கல்வி தொடர்பான குறைபாடுகள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக மேற்படி செயலணி நடவடிக்கைகள் எடுக்கும். அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த், அனைத்துக் குறைபாடுகளும் குறுகிய காலத்தில் நிவர்த்திக்கப்படுமென உறுதியளித்தார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவைகள் இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்வரும 31ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளில் தங்கியிருப்போர் ஆறாவது வலய நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அதன் பின்னர் 17 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுமெனக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் 55 ஆயிரம் மாணவர்களும் 1969 ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். இவர்களுக்கென 13 கோடி ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆசிரி யைகளுக்கான சேலைகள் உட்பட ஏராளமான பொருட்கள் கல்வியமைச்சரினால் கையளிக்கப்பட்டன. இதேவேளை நிவாரணக் கிராமங்களில் கல்வி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவென கண்காணிப்பு அலுவலகமொன்று அமைக்கப் பட்டுள்ளது. கல்வியமமைச்சர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *