இரண்டாம் கட்டமாகவே இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை; மீள் குடியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்னர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். இந்தியாவில் அகதிகளாக உள்ள எமது மக்களை மீள அழைத்து தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் கூறினார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது. இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களும் எமது நாட்டு மக்களே.அவர்களை நாம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். முதலில் வட பகுதியை அபிவிருத்தி செய்து வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர். 180 நாட்களுக்குள் அந்த மக்களை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வடபகுதியை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி செயலணிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இதனூடாக அப்பகுதி துரிதமாக முன்னேற்றப்படும்.
இந்தப் பணிகள் நிறைவடைவதோடு இந்தியாவில் அகதிகளாக உள்ள எமது நாட்டவர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.