வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள வயோதிபர்கள், காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்களை அவர்களது உறவினர்களின் பாதுகாப்பின் கீழ் முகாமைவிட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இதன்படி சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கம் அல்லது பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு) நிமால் லிவ்கேயுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்க ப்பட்டுள்ளது.
வயோதிபர்களை அவர்களது உறவினர்களுடன் அனுப்புவதற்கான தீர்மானம் முன்னமே எடுக்கப்பட்ட போதும் காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்களையும் அனுப்புவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராய்வதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதானமாக மேற்படி விடயமே ஆராயப்பட்டது. முகாமுக்குள் உள்ள வயோதிபர், காயமடைந்தவர், அங்கவீனமானோர் தனது உறவினர் என்பதை உறுதி செய்யும் விதத்தில் கிராம சேவகர், பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தலுடன் தான் குறிப்பிட்ட நபரை பராமரிக்க தகுதியுடையவர் என்பதையும் உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களை சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கத்துக்கோ (001- 2883525) பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு பிராந்தியம்) நிமால் லிவ்கேயுடனோ (024-2222227) தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
வவுனியா அரச அதிபரூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத் திட்டத்திற்கு சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இணைப்பாளராக செயற்படுவார்.