திருக்கோவில் கோளாவில் 3 இல் நேற்றுத் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாகம வீதியிலுள்ள இவரது வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற ஆயுதபாணிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
மார்பில் படுகாயமடைந்த நிலையில் இவர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான நா.லிங்கராசா (55 வயது) என்பவரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.