இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.
KUNALAN
இந்த மக்களின் பரிதாபத்தையும் ஒடுங்கிய வாழ்வையும் பற்றிப் பேசவே இன்று நாதியில்லாமல் போயிற்று.
தமிழ்நாட்டில் கடைவாயால் நுரை தள்ளள தொப்புள்கொடி உறவு பற்றி வாய் கிழியப் பேசி ஓட்டுப் பொறுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளாயிருந்தாலென்ன அல்லது நெடுமாறன் வைக்கே திருமாவளவன் சீமான் போன்ற ஈழ ஆதரவு பேசுவோராய் இருந்தாலென்ன இந்த மக்கள் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். சிறப்பு முகாம் என்ற பெயரால் அந்த மக்கள் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக அடைபட்டுக் கிடப்பதும் அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் உழுத்தல் அரிசிக்காக ஏங்கிக் கிடப்பதும் கொடுமையிலும் கொடுமை. தமிழ்நாடு அரசு இந்த அகதிகளுக்காக ஆண்டுக்கு ஆயிரம்கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது. ஆனால் அந்த மக்களுக்கு ஆயிரத்தில் ஒருசதவீதம்கூட போய்ச் சேருகிறதா என்றால் சந்தேகம்தான். பல ஆயிரக்கணக்கான வெவ்வேறு துறைகளில் சிறப்புள்ள தொழிலாளர்கள் இதற்குள் முடக்கப் பட்டுள்ளார்கள். இந்த ஆயிரம்கோடி ரூபாயில் ஒரு பகுதியை சிறுதொழிற் கூடங்கள் அமைத்து குறைந்த பட்சம் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அந்தந்த இடங்களில் ஏற்படுத்திக் கொடுத்தாலே அந்த மக்கள் தங்கள் காலில் நிற்பதான உணர்வோடு ஒருவேளை கஞ்சியாவது நல்ல அரிசியில் காய்ச்சிக் குடிப்பார்கள்.
“ஓயாத அலைகளாய் சுழன்றடிப்போம்…
துவண்டு கிடக்கும் நாமும்..
விழிகளை துடைத்துக்கொண்டு…
ஒரு தேசம் உருவாக களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்..
உயிர்த்தெழுவோம். உருவாவோம்.
தமிழர்களின் தாகம்…. தமிழீழ தாயகம்.”
என்ற கோசத்தை முன்வைத்து இப்போ தமிழ் நாட்டில் ஒரு புதிய இயக்கம் (இணையத் தமிழர் இயக்கம்) தொடங்கப்பட்டுள்ளது.
“அப்பழுக்கற்ற தியாகமும் நேர்மையும் வீரம் செறிந்த
அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன் நம் தேசிய தலைவர் அவர்கள். கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் இனத்து ஒட்டு மொத்த வரலாற்றின் பெருமை மிகு அடையாளமும் அவரே.”
என்று கூறிக்கொண்டு இப்போ கூத்தடிக்கப் புறப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கென்ன இட்லி வடை பொங்கல் சாம்பாரென உருட்டி விழுங்கிவிட்டு சமிபாட்டுக்காகக் கத்துகிறார்கள. எங்கள் மக்களோ ஒட்டி உலர்ந்த எலும்பும் தோலுமான உடல்களோடு போஷாக்கின்மையால் சருகாய் துவண்டுபோய் போரால் களைத்துக் கிடக்கிறார்கள். இவர்களோ “உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள் ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை. அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல” என்று கொழுப்பெடுத்த பேச்சுப் பேசிக் கிளம்பி விட்டார்கள்.
இந்த இனஅழிப்பின் கொடும்போர் ஏற்படுத்திய காயமும் வடுவும் வலியும் ஆறுவதற்கே எமது மக்களுக்கு இன்னமும் அரைநூற்றாண்டுகள்கூடப் போதாதே ஐயா. இந்த இந்தியப் பொடியள் தனித்தமிழீழம் காண எழுந்து திரண்டு மீண்டும் வரும்படி அறைகூல் விடுகிறார்கள். ஒரு கைக்குண்டைக் கையில் ஏந்துவதற்கே கையில் வலுவில்லாமல் நாலுபக்கமும் அடைபட்ட வேலிக்குள் பட்டினியாய்க் கிடக்கும் மீதிச் சனத்தையும் காவு கேட்க தமிழகத்தில் கிழம்பி விட்டார்கள். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பாதித் தமிழன் ஈழத்தில் அழிந்து போனான். மீதமிருப்போரையும் புதைகுழிக்குள் கொண்டு போக இப்போ புதிதாய் தமிழகத்தில் புலியெனப் புறப்பட்டு விட்டார்கள் வெட்டிப் பேய்கள். கேட்டால் தமிழுணர்வாளர்களாம். தொப்புள்கொடி உறவாம். அங்கு உங்கள் தேசத்தில் 25வருடங்களுக்கும் மேலாக ஒரு லட்சம் அகதிகள் சிறைவாழ்வை அனுபவிக்கிறார்கள் அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் உண்மையான உணர்வாளர்களாயிருந்தால் இதையல்லவா முதலில் கவனிக்க வேண்டும். சினிமாவைப் பார்த்துப் பார்த்தே வீரவசனம் பேசி வளர்ந்த கூட்டம் இது. இதனால் இப்படி எதையாவது குண்டக்க மண்டக்கயாத்தான் செய்ய முடியுமே தவிர ஆக்கபூர்வமாகச் செயற்படுபவர்களல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.
எனவே இவர்களுக்கு சொல்லக் கூடிது இப்போதைக்கு ஒன்று மட்டும்தான்: ஈழப்பெருங்கதையாடல் செய்து இதுவரை நீங்கள் எங்களுக்குச் செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி! எங்கள் எஞ்சியுள்ள மக்களை விட்டுவிடுங்கள். வீரமும் மானமும் உள்ள மறவர்கள்தானே நீங்கள் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் விரும்பினால் இந்தியாவுக்குள் உங்களுக்கென்றொரு தனிநாட்டுக்காகப் போராடுங்கள். உங்களுக்கும் உதவ தொப்புள்கொடி உறவுகள் வராமலா போகும். எங்களை விட்டு விடுங்கள்.
குணாளன்