“தண்டுவம் முதலாளி” என்றழைக்கப்படும் பியதாஸ ரத்னாயக்கா இனந்தெரியாத நபர்களினால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நிதி நிறுவன மோசடி காரணமாக தடுத்துவைக்கப் பட்டிருந்த “தண்டுவம் முதலாளி” பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் ஹங்கமயிலிருந்து நண்பர் ஒருவருடன் வந்துகொண்டிருந்தபோது அவிசாவளை பொலிஸ் பிரிவிலுள்ள திவுரும்பிட்டி, மாதொல அருகே வானொன்றில் வந்த ஆயுததாரிகள் தண்டுவம் முதலாளியை கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், நேற்றுக் காலை இவரது சடலம் குருவிட்ட, புஸ்ஸல்ல தோட்டத்தில் கிடப்பதாக தகவல்கள் கிடைத்தன. உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
கொல்லப்பட்ட தண்டுவம் முதலாளியின் உடலில் சூட்டுக் காயங்களோ, வெட்டுக் காயங்களோ இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்ஜித் குணசேக்கர தெரிவித்தார்