ஆப்கானிஸ்தானில் இந்த மாத முற்பகுதியில் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை ஆய்வு செய்த ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சு, அந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள், 140 பொதுமக்களை கொன்றுள்ளதாக உறுதி செய்துள்ளது.
அமெரிக்க மரைன் படையினரும், ஆப்கான் படையினரும் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்ட வேளையில், அமெரிக்க விமானங்கள் ஃபாரா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், அமெரிக்கா தனது வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் நிலை உருவானது.
இந்த சம்பவத்தின் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதைப் பார்க்கிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனாலும், புலன் விசாரணைகளுக்கு முன்னதாக பலரது சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டதால், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை.