மட்டக்களப்பில் முதல்வர்கள் மாநாடு; 48 பிரேரணைகளில் பலவற்றுக்கு தீர்வு

25th-cm-con.jpg மட்டக்களப்பில் நேற்று நடந்த 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டில் 48 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதாக ஆறு முதலமைச்சர்களும் நேற்று தெரிவித்தனர். முதலமைச்சர்கள் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. 6 முதலமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் முடிவில் நேற்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்கள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 48 பிரேரணைகளில் பெரும் பாலானவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலானவை நிர்வாகம் சார்ந்தவைகளாகவே இருந்தன. தீர்வு காணப்படாத விடயங்களுக்கு முதலமைச்சர்களின் செயலாளர்கள் பேசித் தீர்வு காண்பார்கள் என்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பாக இருதரப்பும் பேசி முடிவெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 26 வது (அடுத்த) முதலமைச்சர்கள் மாநாடு வடமத்திய மாகாண சபையில் இடம் பெறும். முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க மாநாட்டின் தலைவராக இருப்பார். மாநாடு செப்டம்பர் 18 ஆம் திகதி வட மத்திய மாகாண சபையில் நடைபெறும். மாகாண சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு நேற்றைய மகாநாட்டில் கலந்து கொண்ட திறைசேரி உட்பட சகல திணைக்கள அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்குத் தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண முதலமைச்சர்கள் சான்விஜய டி சில்வா, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகிய ஆறு முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இம் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு முதலமைச்சர்கள் ஊர்வலமாக மட்டக்களப்பு மாநகரசபையின் நகர மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதலமைச்சர்கள் மாநகர வளாகத்தைச் சென்ற டைந்ததும் அவர்களால் தேசியக் கொடிகளும் மாகாணக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. தேசியக் கொடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கிழக்கு மாகாணக் கொடியை பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கமும் ஏனைய மாகாணக் கொடிகளை ஏனைய முதலமைச்சர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரி மாணவிகளால் தேசிய கீதமும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவிகளால் தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சமாதானப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *