கொழும்பில் அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்கள், 85 கிலோ வெடிபொருட்கள் மீட்பு

claymore.jpgஅதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர் குண்டுகள், 85 கிலோ வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் நேற்று கொழும்பு பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு பாலத்துறை, லூகாஸ் மாவத்தையிலுள்ள கராஜ் ஒன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே படையின் இத்திடீர் சுற்றிவளைப்பை பாலத்துறை பகுதியில் மேற்கொண்டனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் சுமார் 7.5 கிலோ எடை கொண்ட 18 கிளேமோர் குண்டுகள் இங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் 85 கிலோ வெடிமருந்து மற்றும் இரண்டு வாக்கிடோக்கிகள், வெடிக்கவைக்கும் கருவிகள் இரண்டு ஆகியனவும் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த பிரதேசத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.கொழும்பில் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *