
‘A defeated Prabhakaran, if left alive in India or elsewhere, would not be a threat, but could be a nuisance for both the countries…. It is in India’s interest that the LTTE as a terrorist organization is destroyed once and for all….. If the angry Tamils once again look up to India, there is no reason why we should not reciprocate provided a new leadership emerges in the Tamil community.”
‘தோற்கடிக்கப்பட்ட பிரபாகரன் இந்தியாவிலோ வேறு எங்காவதோ உயிருடன் இருந்தால் அது ஒரு ஆபத்தாக இருக்க முடியாது.ஆனால் இரு நாடுகளுக்கும் ஒரு தொந்தரவாக வேண்டுமானால் இருக்க முடியும்….. பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் ஒரேதடவையில் அழிக்கப்படுவது இந்தியாவின் நலன் சார்ந்தது….. கோபம் அடைந்த தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நோக்கினால் தமிழ் மக்களுக்குள் உருவாகும் புதிய தலைமைத்துவத்திற்கு சார்பில்லாமல் இருப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு காரணமும் இல்லை…..’
B. Raman, Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai.
http://www.southasiaanalysis.org/papers32/paper3160.html
இந்திய புலனாய்வுச் சமூகத்தில் ஒருவரான அல்லது அதனுடன் நெருக்கமான பி ராமனின் எழுத்துக்கள் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளது. இன்று இந்தியா பழிவாங்க விரும்பும் எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரனை உருவாக்கியதில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவை நோக்கிச் செல்வதாகவே இலங்கை – இந்திய புலனாய்வுத்துறை கருதுகிறது. அவர்களது கணிப்பின்படி வே பிரபாகரனின் பொற்கோயில் முள்ளிவாய்க்கால் என்று கணிக்கின்றனர். பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. ஆனால் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இருக்கலாம் – இல்லாமலும் இருக்கலாம் என்பதற்கான காரணங்களும் தகவல்களும் குறைவில்லாமல் உலாவருகின்றது.
இலங்கையின் ஒப்பரேசன் புளு ஸ்ரார் தான் புரஜக்ற் பீக்கன். இந்த இராணுவ நடவடிக்கை என்னவோ பயங்கரவாதத்தை அழிப்பதற்கு என்று சொல்லப்பட்டாலும் தமிழ் மக்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மனித அவலத்திற்கு முகம்கொடுத்து உள்ளனர். மீக மூர்க்கமான இரு இராணுவ அணிக்கிடையே சிக்குண்டுள்ள மக்கள் ஜனவரி முதல் மரண வாழ்வுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
இந்த யுத்தத்தில் எல்ரிரிஈ தான் பின்வாங்கிய பெருமளவிலான பகுதிகளில் இருந்தும் மக்களை தன்னுடன் சேர்த்தே பின்வாங்கியது. வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு பகுதியினரையும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானோரையும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களை முழுமையாகவும் எல்ரிரிஈ யினர் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பு கிட்டத்தட்ட 8 000 சதுர கி.மீ. அதன் மொத்த மக்கள் தொகை – 550 000 க்கும் சற்று அதிகமானது. அதில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் சனத்தொகை மட்டும் 300 000. இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதி முகாம்களை 200 000 மக்கள் வரை வந்தடைந்து உள்ளனர்.
இன்னமும் புலிகளின் 5 சதுர கி மீ பரப்பளவுக்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை பற்றி மிகவும் முரண்பாடான தகவல்கள் வெளியாகின்றன. இலங்கை அரசாங்கம் 20 000 பேரே அங்கு இருப்பதாக மதிப்பிடுகிறது. எல்ரிரிஈ தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னமும் 165 000 மக்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது தனித் தனியாக கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத்தொகையிலும் அதிகமாகும். இலங்கை அரசு மற்றும் எல்ரிரிஈ தவர்ந்த அமைப்புகளின் தகவலின்படி தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 5 சதுர கி மீ பரப்பளவிற்கும் குறைவான பிரதேசத்திற்குள் 50 000 முதல் 100 000 பேர்வரை இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர்.
கடந்த நான்கு மாத காலமாக அரைவயிறு கால்வயிறு உணவுடன் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மக்கள் செல் தாக்குதல், மோட்டார் தாக்குதல், வான் தாக்குதல் என்று உயிருக்காய் துடித்த மக்கள் இன்னமும் துடிக்கவும் தவிக்கவும் விடப்பட்டு உள்ளனர். பட்டினி உளவியல் அவஸ்தைகள் நோய் என்று பல்வேறு காரணங்களால் அவர்களது உடல் உள்ளுறுப்புக்கள் மீளமுடியாத பழுதடைவுக்குச் சென்றுள்ளது. அந்த நிலையில் இருக்கும் அம்மக்களுக்கு ஒவ்வொரு நாள் கடப்பதும் அவர்களது உயிர்வாழ்வை மிகவும் கடினமாக்கும். அத்துடன் முன்னேறும் அரசபடைகளின் மழைபோல் பொழியும் தாக்குதல்கள் நூற்றுக் கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொள்கிறது.
‘தொடர்ந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்கும். சிறிது நேரத்தில் அந்தப் பிஞ்சினது சத்தம் அடங்கிவிடும். உயிரும் அடங்கிவிடும்’ என்று இருவாரங்களுக்கு முன் இந்தியவிற்கு தப்பிச்சென்ற ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவுகளுக்கு தெரிவித்து உள்ளனர். தாங்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சிப்பதாகவும் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் முயற்சிப்பதாகக் கூறுகின்றனர். ‘தப்பிச்செல்லும் போது அல்லது தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகளிடம் காட்டிக் கொடுத்து புலிகளுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களும் தப்பிச் செல்வார்கள். இதுதான் அங்குள்ள நிலை.’ என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவின் 15வது பாராளுமன்றத் தேர்தல் மே 13ல் முடிவடைகிறது. அன்று தான் தமிழ்நாட்டில் வாக்களிப்பு இடம்பெற இருக்கிறது. மே 16ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவை நம்பிய எல்ரிரிஈ யும் அதன் அதரவு அணியும் தற்போது ஜெயலலிதாவையும் பிஜேபியையும் நம்பி தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் யுத்த முனையில் பணயம் வைத்து உள்ளனர்.
இறுதிக் கட்டத்தில் தங்களுக்கொரு அதிஸ்டம் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் எல்ரிரிஈ தலைமை மே 16 தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் மத்தியிலும் தமிழகத்திலும் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் தங்களை உயிர்ப்பிக்கும் என்று எல்ரிரிஈ வலுவான நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தியாவில் குறைந்தது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில் அது இலங்கையின் இராணுவ நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது.
இராணுவக் களநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எல்ரிரிஈ இல்லாத நிலையில் எல்ரிரிஈ இன் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவில் மாநிலத்திலும் மத்தியிலும் கூட ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உள்ளுரில் உள்ள பிரச்சினைகளே தலைக்கு மேல் உள்ள போது இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறும் என்றும் உறுதியாகக் குறிப்பிட முடியாது. மேலும் இலங்கை அரசுக்கு இராணுவ வெற்றி கைக்கெட்டும் தருவாயில் உள்ள போது இலங்கையைப் பகைத்துக் கொண்டு அதனைத் தட்டிப் பறிக்கும் அரசியல் பலம் ஜெயலலிதாவிற்கோ அல்லது இந்திய மத்திய அரசிற்கோ இருக்குமா என்பதும் கேள்விக்குரியது.
ஆனால் மே 13 தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு அது இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமையலாம் என்பதால் இலங்கை அரசு எஞ்சியுள்ள இறுதி நிலப்பரப்பையும் அதற்கு முன்னரே கைப்பற்றிவிடும் இராணுவ நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் மக்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத மே 13 தேர்தலும் மே 16 தேர்தல் முடிவுகள் வெளியாகும் காலமும் அம்மக்களை மூர்க்கத்தனமான இராணுவ நடவடிக்கைக்கும் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்பிற்கும் உட்படுத்தப் போகின்றது.
பரந்து வாழ்ந்த மக்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு மிகவும் உக்கிரமான யுத்தம் ஒன்று நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு தாக்குதலும் பதில் தாக்குதலும் மக்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்து கொண்டே இலங்கை இராணுவமும் எல்ரிரிஈ யும் இந்த யுத்தத்தை நடத்துகின்றன. தமிழ் மக்களைக் காக்க ஆயுதம் தரித்ததாகக் கூறும் புலிகள் தங்களது தலைமையைக் காக்க அப்பாவித் தமிழ் மக்களின் குழுந்தைகளையும் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாக முன்னரங்க நிலைக்கு அனுப்பி பலிகொடுப்பதுமல்லாமல் அந்த மக்களின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு தாக்குதலை நடத்துகின்றனர்.
மறுமுனையில் தங்களது ஒவ்வொரு செல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் பல பத்து அப்பாவி மக்களைக் கொல்லும் என்பதை மிக நன்றாகத் தெரிந்திருந்தும் இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை அரசு நடாத்துகின்ற இந்த யுத்தம் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று கூறுவது ஒருபோதும் மிகையாகாது. எல்ரிரிஈ தமிழ் மக்களைப் பணயமாக வைத்தே தாக்குதலை நடத்துகின்றது என்பதை சர்வதேசமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களில் விட்டில் பூச்சிகள் போன்று தமிழ் உயிர்கள் கொல்லப்படுகின்றன.
சிங்கள பேரினவாத அரசு நாடு சுதந்திரமடைந்தது முதல் இனஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. ஆனால் இந்த இனஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட வேண்டிய மதிவாத தமிழ் தலைமைகள் தங்கள் பாராளுமன்ற அரசியலைக் காப்பாற்றிக்கொள்ளவும் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் ஆர்வம் காட்டினரே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சக்திகளைப் பலப்படுத்த தவறியிருந்தனர். இந்த மிதவாதத் தலைமைகளை துரோகிகள் என்று சுட்டுவீழ்த்திய புலிகள் மாற்றுத் தலைமைகள் எதுவும் இல்லாதபடி அனைவரையும் அழித்தொழித்து ஏகபிரதிநிதியாகி தங்கள் முன்னையவர்கள் விட்ட அதே தவறுகளை ஆனால் அவர்களிலும் மோசமான இழப்புகளுடன் விட்டனர்.
இலங்கையின் தலை யாழ்பாணம். மூளை வடமராட்சி. கணக்கில் புலி. என்றெல்லாம் சுயபாட்டுப் பாடினாலும் அரசியல் கணிதத்தில் யாழ்ப்பாணத்துத் தலைமைகள் வென்றெடுத்தது இழப்புகளும் அழிவுகளும் மட்டும்தான். அர்களிடம் அன்றும் இன்றும் இருக்கும் ஒரே திறமை இழப்புகளை அரசியலாக்கி தங்கள் அரசியல் தலைமையைத் தக்க வைப்பது. அதற்கு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுடைய அரசியல் தவறுகளைப் பட்டியலிட்டால் – வரலாற்றுத் தவறுகள் என்று புத்தகமே அடிக்கலாம் என இன்று புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்.
புலிகள் போட்ட கணக்கின் படி 2005 தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். ‘மூன்றாம் தரப்பு அவசியமில்லை நாங்கள் இருவரும் பேசுவோம்’ என்று மகிந்த ராஜபக்ச கணக்குப் போட்டு ஒரு அழைப்பை விடுத்தார். ஆனால் புலிகள் போட்ட கணக்கு மகிந்த ராஜபக்ச யுத்தத்தைத் தொடங்குவார். இனவாதக் கட்சிகளுடன் உள்ள அவருக்கு சர்வதேச ஆதரவு இருக்காது. ஆகையால் வே பிரபாகரன் ஈஸியாக கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். இறுதியில் பொல்லுக் கொடுத்து அடிவாங்கியதாகி விட்டது நிலைமை.
இப்போது 50 000 – 100 000 மக்களை முள்ளிவாய்க்காலில் பணயம் வைத்துவிட்டும் இந்தத் தவறுகள் இன்னும் தொடர்கிறது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பது போய் தற்போது ஜெயலலிதாவிற்கு திடிரெனத் தாகம் எடுத்துள்ளது. புலத்து விசலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அம்மாவுக்கு ஜெ! என்று வாழத்துச் சொல்வதிலும் வாழ்த்துப் பா பாடுவதிலும் படுபிசியாகி விட்டார்கள். அன்னை இந்திரா தொடக்கிய தமிழீழப் போராட்டம் அம்மா ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக தமிழீழப் போராட்டம் நயன்தாராவிடம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கும் வாழ்த்துச் சொல்ல வாழ்த்துப் பா பாட புலத்தில் ஒரு பெரும் கூட்டம் இருக்கின்றது.
இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எப்போதும் பேரினவாதக் கருத்துக்களையே வெளியிட்டு வருபவர். அவர் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்’ என்ற கருத்து அது பேரினவாதச் சிந்தனையுடன் வெளியிடப்பட்டு இருந்தாலும் உண்மையானது. அந்தக் கோமாளித் தனத்திற்காக 50 000 – 100 000 மக்களை பணயம் வைத்துள்ள புலத்து தமிழர்களை என்னவென்பது.
ஜெயலலிதா பாஜக என்று இந்திய மத்திய மாநில அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்திய அரச இயந்திரம் தனது நலனில் மிகத் தெளிவாக இருக்கின்றது. ஆனால் அதனைக் கையாளக் கூடிய அரசியல் முதிர்ச்சி தமிழ் தலைமைகளிடம் துளியும் இருக்கவில்லை. அவர்கள் தங்களதும் தாங்கள் சார்ந்த அமைப்புகளினதும் குறுகியகால அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களை பணயமாக வைக்கின்றனர். இதன் உச்சத்தை புலிகள் முள்ளிவாய்க்காலில் செய்கின்றனர்.
ஆனால்… இது இத்துடன் முடியப் போவதில்லை என்பதை பி ராமன் மீண்டும் ஞாபகப்படுத்தி உள்ளார்.
‘தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நோக்கினால் தமிழ் மக்களுக்குள் உருவாகும் புதிய தலைமைத்துவத்திற்கு சார்பில்லாமல் இருப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு காரணமும் இல்லை…..’
இந்தியா இந்த விடுகதையை அவிழ்பவர்களைத் தான் தேடிக்கொண்டுள்ளது. இலங்கை – இந்திhய – தமிழர்கள் இந்த முத்தரப்பு இழுபறி இன்னமும் தொடரும். இலங்கையும் – தமிழர்களும் நேரடியாக தங்கள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளாதவரை. ஆனால் துரதிஸ்ட்ட வசமாக அந்த அரசியல் முதிர்ச்சி இலங்கை அரசுக்கும் தமிழ் தலைமைக்கும் கைவரப் பெறவில்லை.
‘அந்தக் யுத்தத்தில் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். பல நாட்கள் பட்டினி இருந்தோம். அங்கிருந்து தப்பித்துக் கொள்ள பல மைல்கள் நடக்க வேண்டி இருந்து. அப்போது இன்னொருவரும் வந்து என்னுடன் சேர்ந்துகொண்டார். அப்பகுதியில் இருந்து இருவரும் தப்பிக்கும் போது நீரின்றி உணவின்றி அவதிப்பட்டோம். நித்திரையின்றி நடந்தோம். கூட வந்த நண்பர் வழியில் பட்டினியால் இறந்துவிட்டார். படுத்து உறங்கினால் என்னை அறியாமலே உயிர் போய்விடும் என்ற பயத்தில் வழித்திருந்தேன். பசிக்கொடுமை தாங்க முடியவில்லை. இறந்த நண்பனின் உடலை சாப்பிடுவதைத் தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. ஆனாலும் உள்ளுணர்வு தடுத்தது. என்னால் என் நண்பனை புசிக்க முடியவில்லை. அதனை நான் செய்யவில்லை.’
பிரபல ஆபிரிக்க இசைக் கலைஞர் (பெயர் ஞாபகத்தில் இல்லை.)
இக்கொடுமையை நோக்கி முள்ளிவாய்க்கால் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இனவாத இலங்கை அரசினது யுத்தத்திற்கும் புலிகளது அரசியல் வங்குரோத்துக்கும் இந்தியத் தேர்தல் முடிவை நோக்கியும் முள்ளிவாய்க்கால் மக்களது உயிர்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளது.
அரசியல் கொள்கைகள், அபிலாசைகள், முரண்பாடுகள் எமது உறவுகளைக் கொல்லவும் கொல்லப்படவும் காரணமாகி உள்ளது. மக்கள் மரணத்தின் விளிம்பில் உள்ள போதிலும் விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. அத்தனையும் அந்த மக்களின் பெயரால் நடத்தப்படுகின்றது.
‘இலங்கை அரசு இனப்படுகொலை செய்கிறது. இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும்.’ என்று ஒரு பகுதியும் ‘புலிகள் மக்களைப் பணயம் வைத்துள்ளனர். புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும்.’ என்று மறு பகுதியினரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் விவாதம் என்று கடந்த பல வாரங்களாக ஈடுபட்டு உள்ளனர். வழமை போல் மக்களை கொடுமையில் இருந்து விடுவிக்க இயலவில்லை. இது இப்படித்தான் இருக்கும். தவிர்க்க முடியாது என்று விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் தொடர்கிறது.
மக்களது மரணங்கள் எண்ணப்படுகிறது. பெருக்கப்படுகிறது. வகுக்கப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. விளக்கப்படுகிறது. ஆனால் அதனை நிறுத்தவதற்கான வழிகள் பற்றி ஆராய கொள்கைகள், அபிலாசைகள், முரண்பாடுகள் இன்னமும் விடவில்லை. எஞ்சியிருக்கும் மக்களும் மரணத்தை சந்திக்கும் வரை இவர்கள் விவாதிப்பார்கள் விளக்குவார்கள் போராடுவார்கள் அந்த மக்களின் பெயரில். அதற்குப் பின் நேரம் கிடைக்கும் போது அவர்களின் ஆவிகள் பற்றியும் விவாதிப்பார்கள். விளக்குவார்கள். போராடுவார்கள்.
பாவம் மக்கள்.!!!
padamman
மம்மி இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைப்பேன் என்கின்றர் ஆனால் சீமான் அனூப்பவேண்டாம் என்கின்றர் இந்திய இராணுவம் போனால் தம்பிக்கு ஆப்பு வைப்பர்கள் என்று சீமானுக்கு தெரிந்த விடயம் புலன் பெயர் தமிழர்(புலி) ஏன்? தெரியவில்லை அல்லது தெரிந்து தான் மம்மிக்கு ஆதரவு தெரிவிக்கின்றர்களா? தம்பி இவ்வளவு காலமும் மக்களுக்கு செய்த நன்மைக்கு நன்றி பாராட்டி இந்திய இராணுவத்தை அழைக்கின்றர்களா?
thaya
……….அம்மா ஜெயலலிதா!
…………………
…………………
பிரபாகரனுக்கு பெண் தோசம்….
………………………
…………..
இப்படி எல்லாம் புலிகள்
பேசியதை மறந்து விட்டார்கள்.
ஆதாரம் அன்ரன் பாலசிங்கம்.
Kullan
மம்மி…. மம்மி சும்மான ஆள் இல்லை. மம்மி புலிகளைப்பற்றி ஒரு மூச்சுக்கூட விடவில்லையே. நடேசர்தானே மம்மிக்க ஆதரவு திரட்டினார். மம்மி புலிகளைக் கொண்டு ஈழம்காணமாட்டார். மம்மி தான்தான் ஈழம்காணுவேன் என்று அடம்பிடிக்கிறார்.
pothu
//ஆனால் மே 13 தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு அது இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமையலாம் என்பதால் இலங்கை அரசு எஞ்சியுள்ள இறுதி நிலப்பரப்பையும் அதற்கு முன்னரே கைப்பற்றிவிடும் இராணுவ நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது.//
தேர்தலுக்கு முன் அரசு நிலப் பரப்புகளை கைப்பற்ற முயலும் என்றாலும் அதன் விளைவாக ஏற்படும் மனித அவலங்கள் தமிழக தேர்தல் முடிவை பாரியளவில் மாற்றக் கூடிய காரணியாக அமையலாம். இலங்கையரசுக்கு இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலை தான்.
——
‘ஒப்பரேசன் புளு ஸ்ரார்’ உடனனான ஒப்பீடு பல வழிகளில் தற்போதைய எமது நிலையுடன் ஒத்து போகிறது.
http://en.wikipedia.org/wiki/Operation_Bluestar
msri
தனிஈழம் நயன்தாராவரை வந்துள்ளது! இப்போ தமிழ்மக்களுக்கு> தம்பி பிரபாவின் +சுட்ட தமிழ் ஈழமா? அல்லது நிரந்தரச் செல்வியின்+ சுடாத தமிழ் ஈழமா? எது தேவை? இதைப்பற்றி வாக்கெடுப்பு நடாத்தினால் யாருக்கு வெற்றிக்கனி கனியும்?
நண்பன்
தமிழர்கள் செய்த மாபெரும் முட்டாள்தனம் , தமிழ் நாட்டை முன் மாதிரியாக அல்லது இந்தியாவை முன் மாதிரியாக வைத்து அரசியலை , போராட்டத்தை மட்டுமல்ல அனைத்தையும் செய்வதே. இதை மற்றி சிந்திக்கவே இவர்களால் முடியவில்லை. இவை எப்போது மாறுமோ அன்றைக்குத்தான் இலங்கைத் தமிழனுக்கு விமோசனம். அதுவரை ஊகும்…..
எத்தனையோ நாடுகளில் வாழ்கிறீர்கள். வித விதமான அரசியல் பின்னணிகளை காண்கிறீர்கள். ஆனால் இன்னமும் அந்த வட்டத்தை விட்டு வெளியே வாறீங்க இல்லையே?
ஜெ வந்தாலும் தம்பி மாற மாட்டார். தம்பிக்கு சொல்லி கேட்க வைக்கக் கூடிய ஒருவர் இருந்தார். அவர் இருந்திருந்தால் சற்று யோசித்திருப்பார். அவர்தான் நம்ம வாத்தியார் MGR. அடுத்து ஜெக்கு என்ன உலகத்துக்கே பெப்பேதான் காட்டுவார்? காட்டினார். கலைஞருக்கு பல இடத்தில் தம்பி மூக்குடைத்திருக்கிறார். அதில் உச்சம் தமிழ் தேசியத் தலைவர் பட்டத்தை பறித்தது?
இதையெல்லாம் விட்டு ஈழத்துக்காக செத்துக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி நினைத்தால், ஐயோ இந்த மண்ணை விட அந்த மக்களை சொஞ்ச காலமாவது நிம்மதியாக வாழ விடு என்று கதறத் தோன்றுகிறது. கேட்பார்தான் இல்லை.
நாட்டுக்கே சோறு கொடுத்த வன்னி மக்கள் , இன்று ஒரு பருக்கை சோறு இல்லாமல் சாகிறார்கள். அதை விட தமிழ் ஈழம் எல்லாம் முக்கியமா?
நீங்கள் செத்தாலும் சரி. கட்டிப் பிடிச்சி புரண்டாலும் சரி.இருக்கிற மக்களை விடுங்க சாமி. அது போதும். ஜெயும் பாஜகவும் 3வது அணியும் வந்து ஒபாமா மாதிரி தங்கட பிரச்சனையை தீர்க்கிறதுக்கு நிற்பாங்க. நாங்க செத்து கிடப்போம். கடைசியில வந்து எல்லாருக்குமா சேர்த்து பெரிசா ஒரு மலர் வளையம் சாத்தப் போறாங்க. தமிழனைக் கொன்ற அதே இராணுவமே சோகமாக நமக்காக சோகமாக இசைக்க வேற போகுது. இதுதான் உண்மை.
gobi
அன்ரன் பாலசிங்கம் மண்டபம் அதிர்ந்த விசிலடிகளுடன் ஜெயலலிதாவைப்பற்றிப் பேசிய கேவலங்கெட்ட தரங்கெட்ட பேச்சுக்களின் வீடியோக்களை ஜெயலலிதா பார்த்திருந்தாவெண்டால் தானே ஆயுதங்களை அனுப்பி புலிகளை அழியுங்கள் எண்டு அறிக்கை விட்டிருப்பா.
BC
நோர்வேயில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது வாக்குப் பதிவு நடத்தி 99% தமிழர் சுதந்திர தமிழீழமே தமது தாகம் என்று வெளிப்படுத்தியுள்ளனராம். ஆகவே இலங்கையில் உள்ள தமிழர்களும் இந்த முடிவை ஏற்றுகொண்டேயாக வேண்டுமாக்கும்.
accu
கனடாவில் சீ.ரீ.ஆர் என ஒரு வானொலி அதில் நடக்கும் கலந்துரையாடல்கள் கேட்டுப்பார்த்தால் வடிவேலு,விவேக் எல்லாம் பிச்சைவாங்கவெணும். சிலநாட்களுக்கு முன் கேட்டது ஜெயலலிதா தேர்தலில் வென்ற பின் தமிழீழம் அமைக்கும்போது தலைவர் பிரபாகரனை பிரதமராக்குவதற்க்கு சிலவேளைகளில் விரும்பமாட்டார். அந்த நேரத்தில் நாம் அதற்க்கு இடம்கொடுக்காமல் எதிர்த்துப் போராடவேண்டும். இது எப்படி இருக்கு! கொமெடிக்கு லண்டன் கனடாவுக்கு கிட்டவும் வரேலாது.
Thirumalaivasan
என்ன இருந்தாலும் ஜெயபாலன் ஜெயலலிதாவையும் நயன்தாராவையும் ஒரே தளத்தில் வைத்து எழுதியது எங்கள் பிரச்சினையை கொச்சைப்படுத்தியது போலுள்ளது. ஜெயலலிதா தமிழ் ஈழம் பெற்றுத்தருவதாகக்கூறிய அதே சமயம் ப.ஜ.கட்சி கூறிய கருத்துக்கள் தமிழர்களிடம் எடுபடாமல் போனது விந்தையே. இலங்கைக்கு இராணுவம் அனுப்ப முடியாது என்று தேர்தல் கூட்டமொன்றில் ஜெயலலிதாவுக்கு எதிர்மறையாக அவர்கள் கூறிவைத்துவிட்டார்கள். மேலும் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை உற்றுக் கவனியுங்கள். எந்த இடத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வார்த்தைகளை அவர் பிரயோகிக்கவில்லை. ஆக இவரும் பிரபாகரன் பொட்டம்மான் இல்லாத ஒரு தமிழ் ஈழம் பற்றியே சிந்திக்கிறார். இந்நிலையில் அவசரப்பட்டு உலகத்தமிழ் அமைப்புகளின் வாழ்த்துக்கள் வேறு. பாவம் தலைவர்.
annpu
இதை ஒரு போதும் எங்களால் செய்யமுடியாது,ஆனால் சனிக்கிழமை(மே:09) காலை எல்ரிரிஈ தலைவர்கள் மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களினால் தப்பிவரமுயன்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் இதில் பலர் இறந்தனர்”,இவ்வாறு அச் சிறுவன் தெரிவித்தான்.
இப்படுகொலைகளைக் கன்டு,இனியும் இவ்இயக்கத்தில் இருக்ககூடாது எனமுடிவெடுத்து எவ்வாறாகினும் தப்பி படையினரிடம் சரணடைய வேன்டும் என்று என்னி மற்றவர்களையும் கூட்டிக்கொன்டு வந்ததாக சரனடைந்தவர்களில் முதியவரான 23 வயது சிறுவன் தெரிவித்தான்.
“என்னால் ஊகிக்கமுடியாது எத்தனை பேர் இதில் இறந்தார்கள் என்று. எமது சொந்த மக்கள் மீது நடத்தும் இக்கொடூரத்தை எங்களால் கண்கொன்டு பாக்க முடியவில்லை இதனால் அதைவிட்டு தப்பி வர முடிவெடுத்தோம்”.
இதேவேளை,எல்ரிரிஈயினரின் மூன்று வெவ்வேறான தொடர்புசாதனங்களை ஒத்துக்கேட்ட போது எல்ரிரிஈயினர்தான் இக்கொடூரத்தைச் செய்தாரகள் என்பது ஊர்ஜீதம்.
ஒலிபரப்பு 01 0345 மணி(மே:09)
செந்தூரன்: ”தப்பமுயன்ற 20 பேரைக் கைது செய்துள்ளேன் ,ஆனால் அதிகமான சனங்கள் வருகின்றார்கள் என்னால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.”
பிரியாளன்: “உன்னால் முடியுமானவரை தப்பிச் செல்ல விடாத,உதவிக்கு மேலதிக ஆட்கள் உனக்கு அனுப்பி வைக்கின்றன்”
ஒலிபரப்பு _02 0355மணி(மே:09)
செந்தூரன்: “20 பேரை கைது செய்துள்ளேன் வாகனம் ஒன்றை அனுப்பு”.
அம்புராஜ்:”மலரவன் மாஸ்டருடன் வாகனமொன்றை அனுப்பி வைக்கிறன் யாரையும் தப்பிக்க விடாத”
ஒலிபரப்பு _03 -0615 மணி(மே:09)
திருமலை மாஸ்டர்: “எப்படி இவ்வளவு பொதுமக்கள் காயமடைந்தது?”
செந்தூரன்: “நிறைய சனம் வந்தவங்க,எங்களால் கட்டுப்படுத்த முடியாது இதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினம்.
இவ்வாறு தாக்கிவிட்டு, கடந்த வார இறுதியில் இராணுவத்தினரின் கொடூரத்தாக்குதலில் 1000பேர் இறந்ததாக எல்ரிரிஈயினருக்கு சார்பான ஊடகங்களுக்கு பொய்த் தகவல் வழங்கினர். எமக்குக் கிடைத்த தகவல்களின் படி இச் சிவிலியன்கள் இராணுவத்தினரின் பகுதிக்கு தப்பிவர முயன்ற போது எல்ரிரிஈ பயங்கரவாதிகள் மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களினால் தாக்கியுள்ளார்கள் இதனால்தான் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெட்டத் தெளிவு.
BC
//என்ன இருந்தாலும் ஜெயபாலன் ஜெயலலிதாவையும் நயன்தாராவையும் ஒரே தளத்தில் வைத்து எழுதியது எங்கள் பிரச்சினையை கொச்சைப்படுத்தியது போலுள்ளது.//
பிரச்சினையை கொச்சைப்படுத்தியது புலிகள் தான்.தமிழ்நாட்டிலிருந்து வரும் ஒரு பதிவில் நடேசன் எல்லோரிடமும் யுத்த நிறுத்த கோரிக்கை விட்டுவிட்டார். அடுத்தது நயன்தாராவும் அசினும் தான் எனறு குறிப்பிடபட்டிருந்தது.
மாயா
BC
தமிழீழம் நோர்வேயில உருவாகப் போகுதோ? …………என்னதான் செஞ்சாலும் மசியிறாங்களே இல்லயே? எதுவும் செய்யுங்கோ. கொலை வரை போகம இருந்தா போதும்?
murugan
கொலை வரை போகம இருந்தா போதும்”
நீங்கள் ஜிரிவி பார்ப்பதில்லை போலுள்ளது. ஒன்றுமே நடக்குது இல்லை. இனி வேற வழியில் தான் இறங்க வேணும் என புலிகள் சுருதி சேர்க்கிறார்கள். யார் எழுந்து ஆடி அகப்படப் போகிறார்களோ தெரியவில்லை.
நண்பன்
மம்மிக்கும் ஓட்டில வேட்டு வச்சிட்டாங்க
தம்பிக்கும் வேட்டால ஓட்டை வச்சிட்டாங்க
நெக்ஸ்ட் என்ன?
BC
மம்மி திரும்ப வத்திருந்தால் வெளிநாடுகளில் உள்ள தம்பியின் ஆதரவாளர்கள் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் “எங்கும் வெல்வோம் எதிலும் வெல்வோம். தலைவா ஆணைபோட்டு வழியை காட்டு” நல்ல காலம் இப்படியான பிதற்றல்களை கேட்க வேண்டிய தேவையில்லை.
raja
திரு ஜெயபாலன் அவர்கட்கு
தாங்களும் தற்போது செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களின் முதுகில் சவாரி செய்யவே நினைக்கின்றீர்கள் போலும். இப்படி சொல்லி விட்டேன் என்று புலி முத்திரை குத்திவிட வேண்டாம். இந்த தருணத்தில் தமிழரை காக்க நீங்கள் எடுத்த நடவடிக்கையை பட்டியலிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். மம்மி தம்பி என்று தலையங்கம் எழுதுறீங்கள்.
BC
தம்பியின் தொண்டனே Raja , இதையும் பார்க்கலாமே!
http://thesamnet.co.uk/?p=11088
http://thesamnet.co.uk/?p=11529
நண்பன்
//தமிழரை காக்க நீங்கள் எடுத்த நடவடிக்கையை பட்டியலிட்டு காட்டுங்கள் பார்க்கலாம்.// – raja on May 16, 2009 10:57 am
தமிழீழ குரோபதிகளான புலியாலயே தமிழரைக் காக்க முடியவில்லையாம்.
தேசம் பெயர் வச்சதைக் கொண்டு கொண்டு ஜெயபாலனால என்னத்தை காக்க முடியும்?
palli.
//இப்படி சொல்லி விட்டேன் என்று புலி முத்திரை குத்திவிட வேண்டாம்//
அதுதான் கருத்திலும் கடுப்பிலும் தெரியுதே.
//இந்த தருணத்தில் தமிழரை காக்க நீங்கள் எடுத்த நடவடிக்கையை பட்டியலிட்டு காட்டுங்கள் பார்க்கலாம்//
அப்படியா தேசம் பட்டினி போரோ அல்லது இத்துபோன கொடிபோரோ நடத்தவில்லை என்பது உன்மைதான். ஆனால் போராட்டம் என்னும் பெயரில் நடக்கும் சதிராட்டங்களையும் புலி அழிப்பு என சொல்லி மக்களை அழிப்பதையும் சங்கரியின் கடித உலகம் டக்கிளசின் வடக்கின் வசந்தம் கருனாவின் இருட்டிய கிழக்கு பிள்ளையானின் எடுப்பார் கைபிள்ளை இப்படி எத்தனை படங்களை வாரகனய் தேசம் என்னும் தியேட்டரில்
ஓட்டினோம் அதை பார்க்கவில்லையா? என்ன ராசா இப்படி பண்ணிபுட்டியள்.