சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : “சோனியாகாந்தி கடந்த புதன்கிழமை தமிழகம் வருவதாக இருந்தது. அதை ரத்து செய்தார். அதனால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சோனியா சென்னையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைச் சற்றும் மதிக்காத அவர் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடவேண்டும். அனைவரும் கறுப்புச் சின்னம் குத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நானும் பாரதிராஜாவும் பங்கேற்கிறோம்’ எனக் கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.