பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கத்துக்கான பரிந்துரைகளை முன்வையுங்கள் – நீதியமைச்சர்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை (PTA) நீக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான குழுவுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற ஆரம்பகட்டக் கலந்துரையாடலில் இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது என்றும், புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கு இணங்க அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் PTA-வை நீக்க முயற்சிக்காததை விமர்சித்த அமைச்சர் ஹர்ஷன, தற்போது நியமிக்கப்பட்ட குழு குறுகிய காலத்துக்குள் தேவையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றார். மே மாத தொடக்கத்தில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் கருத்துகளும் பெறப்படும் எனவும் அவர் கூறினார்.