படலந்த வதைமுகாம் உட்பட ஏனைய வதைமுகாம்கள் பற்றியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்
பட்டலந்த வதை முகாம் போன்று பல வதைமுகாம்கள் இருந்தன. அவ்வாறான அனைத்து வதை முகாம்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க நேற்றைய தினம் மார்ச் 29 வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்த பின் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பிலும் கருத்து வெளியிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் காணிகள் விடுவிப்பு, வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் வடக்கின் கைத்தொழிற்ச்சாலைகளை மீள இயக்குதல் என படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அந்த நடைமுறைகளின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என அமைச்சர் வாக்குறுதியளித்தார்.
அமைச்சர் பிமல் குறிப்பிடும் போது தெற்கில் ஜேவிபி, யுஎன்பி என்று பிரிந்து இருந்தது போன்று வடக்கு- கிழக்கில் எல்ரிரிஈ , புளொட் , ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், ரெலோ என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள். வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பூடகமாக தெரிவித்த வதைமுகாம்கள் விசாரணையில் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து இராணுவ துணைக்குழுக்களாக செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் நடத்திய வதைமுகாம்கள் தொடர்பான விசாரணகள் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக புளொட் மாணிக்க தாசன் தலைமையில் வவுனியாவில் வதைமுகாம் குறிப்பிடத்தக்கது.